காசாவில் உதவிக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் : கடந்த 8 நாட்களில் 102 பலஸ்தீனர்கள் இவ்வாறு பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 4, 2025

காசாவில் உதவிக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் : கடந்த 8 நாட்களில் 102 பலஸ்தீனர்கள் இவ்வாறு பலி

காசாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவில் இடம்பெறும் உதவி விநியோக இடத்திற்கு அருகே இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் 27 பலஸ்தீனர்கள்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடந்த 8 நாட்களில் இந்த உதவி இடங்களில் பட்டினியில் காத்திருக்கும் பலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஐ தொட்டிருப்பதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதல் தொடர்பில் சுதந்திர விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

காசாவில் ஐ.நா. அமைப்பின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படும் உதவி விநியோகத்திற்கு மாற்றாகவே அமெரிக்கா ஆதரவில் காசா மனிதாபிமான நிறுவனம் என்ற அமைப்பு இந்த சர்ச்சைக்குரிய உதவி விநியோகத்தை முன்னெடுத்து வருகிறது. 

குறிப்பாக தெற்கு காசாவின் ரபா நகரில் இருக்கும் இந்த உதவி விநியோக தளத்திற்கு பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் உதவிகளை நாடி வரும் நிலையில் அவர்கள் மீது இஸ்ரேலியப் படை ஆளில்லா விமானங்கள், டாங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ரபாவில் உதவிக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டு மேலும் 90 பேர் காயமடைந்ததாக கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுவதந்த பெரும்பாலானவர்கள் துப்பாக்கிக் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

டாங்கிகள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களினால் நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே அதிகம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்துள்ளார்.

காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி விநியோக இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் அல் அலாம் சுற்றுவட்டப்பாதையை கூட்டத்தினர் அடைவதற்கு சில மீற்றருக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் உதவி விநியோக இடத்தில் இருந்து சுமார் அரைக் கிலோமீற்றர்கள் தூரத்தில் தனிப்பட்டவர்கள் மீது சூடு நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் அந்தத் தனிப்பட்ட நபர்கள் படையினரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்ததாக அது கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் உதவிக்குக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் சுமார் 200 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமையும் ரபாவில் உள்ள அமெரிக்க ஆதரவு உதவி விநியோக இடத்திற்கு அருகிலே இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறின.

இதன்படி காசா மனிதாபிமான நிறுவனம் கடந்த மே 27 ஆம் திகதி உதவி விநியோகத்தை ஆரம்பித்தது தொடக்கம் உதவிக்காக காத்திருந்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை சுமார் 100ஐ தாண்டி இருப்பதாகவும் 400இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் குறித்து மர்வான் அல் நவுக் என்பவர் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது,

‘கூட்டத்தினருடன் நான் நின்றுகொண்டிருந்தபோது விநியோக இடத்தை நோக்கி மக்கள் முண்டியடித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால் தள்ளியதால் என்னால் நகர முடியாமல்போனது. பின்னர் ஆளில்லா விமானம் ஒன்று தோன்றி சூடு நடத்த ஆரம்பித்தது. தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் கூட்டத்தை நோக்கி நேராக துப்பிக்கிச்சூடு நடத்தியதோடு அமெரிக்க பாதுகாப்பு படைகள் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டன. உயிர் தப்புவதற்கு மக்கள் அனைத்து பக்கங்களிலும்; ஓட ஆரம்பித்தார்கள் பல டஜன் பேர் கொல்லப்பட்டனர்’ என்றார்.

இந்நிலையில் ஐ.நா. செயலாளர் நாயகம் குட்டரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசாவில் உதவிக்குக் காத்திருந்தவர்கள் கொல்லப்பட்டது மற்றும் காயமடைந்ததாக வெளியான செய்தி திகைப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உடன் சுயாதீன விசாரணை நடத்தவும் குற்றவாளிகளை பொறுப்புக்கு உட்படுத்தவும் நான் அழைப்பு விடுக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காசாவுக்கான உணவு, மருந்து உட்பட அனைத்து உதவி விநியோகங்களையும் இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முடக்கி இருக்கும் நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது.

தவிர, காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் கான் யூனிஸில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்த அல் நஜ்ஜார் குடும்பத்தின் குடியிருப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானம் நடத்திய தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று கான் யூனிஸின் வட மேல் பகுதியில் அஸ்தா பகுதிக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் மேலும் இரு பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவிலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதோடு ஜபலியாவில் உள்ள பிஷாரா பேரங்காடிக்கு அருகே இஸ்ரேலியப் படையின் செல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக வபா கூறியது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 208 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 54,510 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 124,901 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் மூன்று இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று குறிப்பிட்டது. வடக்கு காசாவில் தமது போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் கடந்த திங்கட்கிழமை கடும் சண்டையில் ஈடுபட்டதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்ட நிலையிலேயே இஸ்ரேலியப் படை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காசாவில் இரண்டு மாத போர் நிறுத்தத்திற்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் மீண்டும் மோதல் வெடித்ததை அடுத்து அதிக இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்ட சம்பவமாக இது உள்ளது.

No comments:

Post a Comment