தேர்தல் செலவு அறிக்கை சமர்பிக்கும் இறுதிநாள் இன்று : பொலிஸ் நிலையங்களுக்கு சமர்ப்பிக்காதோர் தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 27, 2025

தேர்தல் செலவு அறிக்கை சமர்பிக்கும் இறுதிநாள் இன்று : பொலிஸ் நிலையங்களுக்கு சமர்ப்பிக்காதோர் தகவல்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய காலம் இன்று (27) நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது.

அதற்கிணங்க இதுவரை அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் தாம் போட்டியிட்ட மாவட்டத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று நள்ளிரவுக்கு முன்னர் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆனைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் அதற்கான காலம் எவ்வகையிலும் மீள நீடிக்கப்படாது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செலவு அறிக்கைகளை நேரில் சமர்ப்பிக்கலாம் என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு இணையதளம் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

செலவு அறிக்கைகளை ஏற்பதற்காக இன்று நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வேட்பாளரும், அரசியல் கட்சியும் தாம் செலவு செய்தவை தொடர்பான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், செலவு செய்யவில்லை என்றால் அதுதொடர்பான குறிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இன்று நள்ளிரவுக்குப் முன்னர் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்காலத்தில் தேர்தல் சட்டத்தின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment