காசா தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் விசாரணை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 29, 2025

காசா தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் விசாரணை ஆரம்பம்

காசா மீதான இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் அது காசாவுக்கு உதவிகள் செல்வதை தடுத்து சர்வதேச சட்டத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது.

காசாவுக்கு உதவிகள் செல்வதை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலில் ஐ.நா உயர் நீதிமன்றத்தில் நேற்று (28) ஆரம்பமான வழக்கு விசாரணை ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமான இந்த வழக்கு விசாரணையை ஆரம்பித்து பலஸ்தீன தரப்பு தனது வாதத்தை முன்வைத்துள்ளது. 

இதன்போது நெதர்லாந்துக்கான பலஸ்தீன தூதுவர் அம்மார் ஹிஜாஸி வாய்மொழி மூலம் தமது வாதத்தை முன்வைத்தார்.

‘இரண்டு மாதங்களுக்கு மேலாக காசாவுக்கு உணவு, நீர், மருந்து, மருத்துவ விநியோகங்கள் அல்லது எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வருவதோடு உதவிக்காக விடுத்த பல மனுக்களையும் நிராகரித்து இஸ்ரேல் உச்ச நீதிமன்றமும் இந்தக் கொள்கையை ஆதரிக்கிறது. இது பட்டினி உயிரிழப்புகள் உட்பட மனிதனால் உருவாக்கப்படும் மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுக்கிறது’ என்று அவர் நீதிமன்றத்தின் முன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் இஸ்ரேல் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்து எழுத்து மூலம் வாதத்தை முன்வைத்தபோதும் தனது தரப்பு பிரநிதிகளை பங்கேற்கச் செய்யவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.நா நீதிமன்றத்தின் இந்த விசாரணை தமது நாட்டின் மீதான ‘திட்டமிட்ட அடக்குமுறை மற்றும் சட்டவிரோதமாக்கலின்’ ஓர் அங்கமாக உள்ளது என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோ சார் சாடியுள்ளார்.

இந்த நீதிமன்றம் முழுமையாக அரசியலாக்கப்பட்டிருப்பதாகவும் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உரை ஒன்றில் அவர் குறிப்பிட்டார். ஹேகில் இடம்பெறும் செயற்பாடு வெட்ககரமானது என்றும் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கும் வரை காசாவுக்கு பொருட்கள் மற்றும் உதவிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று இஸ்ரேல் கூறிவருகிறது.

இந்நிலையில் ஹேகில் ஐந்து நாட்கள் நீடிக்கவுள்ள விசாரணையில் 15 நீதிபதிகள் குழாத்தின் முன் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உட்பட 38 நாடுகள் கருத்து வெளியிடவுள்ளன. அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஆபிரிக்க ஒன்றியமும் தமது சமர்ப்பிப்பை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பரில் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், பலஸ்தீனர்கள் தொடர்பான இஸ்ரேலின் கடப்பாட்டை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டதோடு இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனையும் கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே ஐ.நா மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொடர்பில் இஸ்ரேலின் கடப்பாட்டை தெளிவுபடுத்த நீதிபதிகளை ஐ.நா நிறுவனம் கோரியுள்ளது. எனினும் சர்வதேச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை செயற்படுத்தும் கடப்பாடு இல்லை என்பதோடு அதனை செயற்படுத்துவதற்கான அதிகாரமும் நீதிமன்றத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையிலேயே இந்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கான் யூனிஸ் மற்றும் காசா நகரில் கடந்த ஞாயிறு இரவு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா நகரின் கிழக்கே அல் துபா பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கான் யூனிஸின் கிழக்காக இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதன்படி ஞாயிறு இரவு தொடக்கம் நேற்று காலை வரை இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,243 ஆக அதிகரித்துள்ளது. 

குறிப்பாக காசாவில் ஒருவர் மாத்திரமே உயிர் தப்பிய நிலையில் 5,070 க்கும் அதிகமான குடும்பங்களை இஸ்ரேல் அழித்தொழித்திருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் 18,000 க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் 12,400 க்கும் அதிகமான பெண்களை கொன்றிருப்பதோடு 2,180 க்கும் அதிகமான குடும்பங்களின் தாய், தந்தை மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா போர் பிராந்தியத்திலும் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு யெமனில் உள்ள தடுப்பு நிலையம் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 68 ஆபிரிக்க குடியேறிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய சாதா மாகாணத்தில் இடம்பெற்ற இந்த குண்டுவீச்சில் மேலும் 47 பேர் காயமடைந்திருப்பதோடு அதில் பெரும்பாலானவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஹூத்திக்களின் ‘அல் மசிரா’ தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவம் இது தொடர்பில் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனினும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் 800 க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க கட்டளை மையம் அறிவித்து சில மணி நேரத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் இடம்பெறும்போது சாதாவில் உள்ள குடியேறிகள் மையத்தில் 115 ஆபிரிக்க நாட்டு குடியேறிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அண்டை நாடான சவூதி அரேபியாவுக்கு செல்லும் நோக்கத்துடனேயே ஆபிரிக்க குடியேறிகள் யெமனை நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செங்கடல் மற்றும் அதென் வளைகுடாவில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹுத்திக்கள் தாக்குதல் நடத்திய நிலையிலேயே அமெரிக்கா அந்த கிளர்ச்சியாளர்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

மறுபுறம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் இஸ்ரேல் நேற்று முன்தினம் வான் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தியதாக கூறி கட்டம் ஒன்றை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் கட்டடத்தில் இருப்பவர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் போர் நிறுத்தம் ஒன்று ஐந்து மாதங்களுக்கு முன் அமுலுக்கு வந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment