இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் : ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ளக்கூடாது - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, April 4, 2025

இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் : ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ளக்கூடாது - சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ளக்கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும்.

இலங்கை பிளவுபடாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டுதான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும். குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்ட சபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப் பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment