நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தோடு, குளியாபிட்டிய நகரில் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்புபடுத்தி, கைது செய்து, சித்திரவதை செய்தமை தொடர்பில் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் அமல் சஞ்ஜீவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் முனைந்தபோது அவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் அவரை கைதில் இருந்த நபரை தாக்கி துன்புறுத்தி பணம், தங்க நகைகளை பலாத்காரமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள பீ 44028/23 எனும் வழக்கில் ஆஜர் செய்தனர்.
இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தோடு, குளியாபிட்டிய நகரில் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்புபடுத்தி, கைது செய்து, சித்திரவதை செய்தமை தொடர்பில், அவ்வர்த்தகரால் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 11/24 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு ஜூன் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பின்னணியில், குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் ஏனைய சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய, விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணை பிரிவு (பொலிஸ்) இதுவரை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரியவில்லை.
கடந்த வாரம் இது தொடர்பிலான வழக்கு குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யினர் மன்றில் ஆஜராகி மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தனர். இதன்போது சந்தேகநபருக்கு பிணை கோரப்பட்டது. அதற்கு சி.ஐ.டில் தரப்பில் பெரிதாக எதிர்ப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் பாதிக்கப்பட்ட வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் சார்பில் சட்டத்தரணி ஷஹ்மி பரீட்டுடன் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சந்தேகநபருக்கு பிணையளிக்க எதிர்ப்பு தெரிவித்து விடயங்களை முன்வைத்தார்.
பாதிக்கப்பட்ட வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகார சபையினால் பாரிய அச்சுறுத்தல் உள்ள நபராக பெயரிடப்பட்டுள்ளவர் எனவும், அவருக்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், ஏனைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவருக்கு பிணையளிக்கக் கூடாது என கோரினார்.
சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோதே கைதாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், இவை பிணை மறுக்க கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் என சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலும் விடயங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் விடயங்களை பரிசீலித்த குளியாபிட்டிய நீதிவான், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பிணை தொடர்பில் ஆராய இது நேரமல்ல என குறிப்பிட்டு பிணையை மறுத்து அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த 2022 ஜூன் 13 ஆம் திகதி மனுதாரரின் வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் நபரை அச்சுறுத்தி, பொலிஸ் பரிசோதகர் மனோகர எனும் அதிகாரி தலைமையிலான குழு தன்னை இலக்கு வைத்ததாக மனுதாரர் இதற்கு முன்னர் உயர் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மனுதாரரான சாஹுல் ஹமீட் ஷெய்க் எனும் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் என்ற, பாத்தி மாவத்த, மதகொட்ராமுல்ல பகுதியைச் சேர்ந்த மனுதாரரை சட்டவிரோதமாக கைது செய்து, பல நாட்கள் தடுத்து வைத்திருந்ததாக சி.ஐ.டியினர் பதிவு செய்துள்ள வாக்குமூலங்கள் ஊடாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2023 ஜூலை 25 ஆம் திகதி, பாதிக்கப்பட்ட வர்த்தகர் ஜனாதிபதி செயலகத்துக்கு செய்த முறைப்பாடு பின்னர் பொலிஸ்மா அதிபர் ஊடாக சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டதை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சி.ஐ.டி.யினர் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
சிவில் உடையில் வந்த, நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்பு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட குறித்த 6 பேர், மனுதாரரின், இலக்கம் 2, பிரதான வீதி, குளியாபிட்டிய எனும் முகவரியில் அமைந்துள்ள நகைக் கடையில் இருந்த தங்க நகைகளை பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொள்ளையடித்ததாக முறைப்பாட்டிலும், உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை மீறல் மனுவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரகல போராட்டத்தை தொடர்ந்து நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டலில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கமும், ஒரு தொகை டொலரையும், மனுதாரர் கொள்வனவு செய்ததாக பொலிஸார் அச்சுறுத்தி, நகைக் கடையில் இருந்த நகைகளை கொள்ளையிட்டதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டி, அதற்கான ஆதாரமாக கடையில் இருந்த சி.சி.ரி.வி. காட்சிகளின் பிரதிகளையும் உயர் நீதிமன்றுக்கு இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.
அவ்வாறு கடையிலிருந்து பொலிசார் கொள்ளையிட்ட நகைகளின் ஒரு பகுதியை, திருடப்பட்ட தங்கம் எனக் கூறி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன், அவை திருடப்பட்டவை அல்ல எனவும் அதற்கான பற்றுச்சீட்டுகள் இருப்பதையும், ஒரு தொகை தங்கத்தை பொலிசார் நீதிமன்றில் கூட முன்னிலைப்படுத்தவில்லை எனவும் பாதிக்கப்பட்ட வர்த்தகரின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உயர் நீதிமன்றுக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதனைவிட, சுமார் 48 மணி நேரம் பொலிசார் எந்த நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தாது மனுதாரரை, நீர்கொழும்புக்கு அழைத்துச் சென்று பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் தடுத்து வைத்து, அவரின் உடைகளை களைந்து, இரும்பு கம்பி கொண்டு தாக்கி சித்திரவதை செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாகவும், அதற்காக அவர், பிணை பெற்ற பின்னர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்தியசாலை அறிக்கைகள் அதனை உறுதி செய்வதாகவும் உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலையில் உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் முதல் 6 பிரதிவாதிகளான நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிஹான் மனோஹர, அப்பிரிவின் சார்ஜன் சிந்தக, பொலிஸ் கான்ஸ்டபிள்களான அமல் சஞ்ஜீவ, வி.ஜி. பண்டார,டி.எம்.பி. திஸாநாயக்க,கே.ஆர்.டி. குலதுங்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பிரகாரமே ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சி.ஐ.டி.யினர் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பிரகாரம், தண்டனைச் சட்டக் கோவையின் 333,373 மற்றும் 380 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட வர்த்தகரிடம் இருத்து சுமார் 10 ஆயிரம் அமரிக்க டொலர்கள் (39 இலட்சம் ரூபா), ஒரு தொகை தங்கம், நகைகள் பலாத்காரமாக பெறப்பட்டுள்ளமையும் அதற்காக அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமையும் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள் ஊடாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயே சி.ஐ.டி.யினர் இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Vidivelli
No comments:
Post a Comment