உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மே மாதம் 3ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும் அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது தடை செய்யப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதியிலுள்ள உப தபால் அலுவலகத்திற்குச் சென்று தமக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வாக்களிக்க சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள், தத்தமது பிரதேசங்களிலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் தங்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment