விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வந்தாறுமூலை கம நல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம், வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும், மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதாகவும் கூறி, அதற்கு இலஞ்சமாக 50 ஆயிரம் ரூபாவை கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் கோரியுள்ளார்.
இதனையடுத்து, அந்த விவசாயி கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில், மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர், கம நல அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டபோது அவரை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, கம நல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தரை கைது செய்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள், அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி, கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment