(எம்.மனோசித்ரா)
நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமற்றதாகும். எனவே இந்த கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இனியும் தொடரும் என்று நாம் நம்பவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சாத்தியமற்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்மையான தேவைப்பாடு காணப்பட்டால் இருவரும் நேரடியாக இதில் தலையிட வேண்டும். ஆனால் இரு தரப்பிலுமே அவ்வாறானதொரு நிலைமையை அவதானிக்க முடியவில்லை.
ரணில் மற்றும் சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள்தான் இந்த வேலைத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் அவருடன் இவ்வாறானவர்கள் இருக்கவில்லை. அவர் சுயாதீனமாகவே முடிவுகளை எடுத்தார். ஆனால் தற்போதைய இரு தலைவர்களுமே அவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதில்லை. இணைந்து செயற்படாவிட்டால் இந்த இரு கட்சிகளுக்குமே எதிர்காலம் இல்லை.
நாட்டு மக்களுக்காகவும், இளம் தலைமுறையினருக்காகவும் புதிய வேலைத்திட்டமொன்றையாவது நாம் ஆரம்பிப்போம்.
இந்த கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இனியும் தொடரும் என்று நாம் நம்பவில்லை. நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த இணைவு சாத்தியமற்றது என்று நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றேன்.
எனவே நிபந்தனைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு இரு தரப்பும் செயற்பட வேண்டும். சிறு பிள்ளைகள் கூட புரிந்து கொள்ளக் கூடிய இந்த விடயத்தை ஏன் இந்த தலைவர்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. கட்சி ஆதரவாளர்களது இறுதி எதிர்பார்ப்பும் சிதைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment