(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்படும்போது பெற்றுக் கொண்ட கட்டுப் பணத்தை மீளச் செலுத்த வேண்டும். அல்லது அவற்றை மீண்டும் கட்டுப் பணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் எம்மிடம் பாரிய நிதி இல்லை. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது கடினமாகும். ஆகவே எதிர்க்கட்சிகளின் நிலையை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமான முறையில் முரண்பாடற்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக் கொண்ட வேட்பு மனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கு நாங்கள் இணக்கம் தெரிவித்தோம்.
2023ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் உரிய காரணிகள் ஏதுமில்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டது. இதற்கு எதிராக நாங்களும் நீதிமன்றம் சென்றோம்.
கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கமைய தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிறந்த முறையில் தேர்தலை நடத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்னிலையாகியிருந்தனர். இவர்கள் செலுத்திய கட்டுப்பணம் திறைசேரியில் உள்ளது. புதிய வேட்பு மனுத் தாக்கலின்போது அந்த கட்டுப் பணத்தையே ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.
எம்மிடமோ, எமது கட்சியிடமோ அந்தளவுக்கு நிதி இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சி நிதியத்துக்கு கிடைப்பதில்லை. பத்தரமுல்லையில்தான் வட்டியில்லா கடனை பெற வேண்டும்.
தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உண்டு. ஆனால் அமைச்சரவை பேச்சாளர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்துவதாக குறிப்பிடுகிறார். அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பிக்கிறதா? தேர்தலை இந்த திகதியில் நடத்துமாறு அறிவுறுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை நடைபெறும். இதனிடையில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும்? எதிர்க்கட்சிகளை பாராளுமன்றத்துக்குள் வைத்துவிட்டா, தேர்தலை நடத்த ஆணைக்குழு முயற்சிக்கிறது. எதிர்வரும் மாதம் சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதனையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
நடப்பு காரணிகளை கருத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தேர்தலை பிற்போடுமாறும், தாமதிக்குமாறும் நாங்கள் கோரவில்லை. இருப்பினும் அனைவரும் தேர்தல் பிரச்சாரங்களில் சுதந்திரமான முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment