கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பது ஊழலை ஆதரிப்பது போன்றாகும் - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பது ஊழலை ஆதரிப்பது போன்றாகும் - சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் கடந்த காலங்களில் வெளியிட்ட 2500 க்கு மேற்பட்ட அறிக்கைகளில் சுமார் 95 வீதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த நிறுவனங்கள் தவறி இருப்பது துரதிஷ்டமான சூழ்நிலையாகும். இந்த நிலை நாட்டின் ஊழலுக்கும் வீண் விரயத்திற்கும் ஆதரவளிக்கும் செயலாக மாறக்கூடும். ஆகையால் இவ்விடயம் தொடர்பில் பொறுப்புடையவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்துகிறது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிப்பது தொடர்பில் சமுதாயத்தில் பாரிய கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தத்தின் காரணத்தினால் இலஞ்சம் அல்லது ஊழல் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை புதுப்பிக்க வேண்டி உள்ளது.

எமது நாடு முகம் கொடுத்துவரும் சவால்களை கருத்தில் கொள்கையில் இவை போதுமானது இல்லை என்பது புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் நாட்டின் எதிர்கால நலன்கருதி அரச துறையின் நேர்மை தன்மையை பாதுகாப்பதற்கு பல்வேறு தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது உகந்த செயல் அல்ல.

மேலும் நிதி மற்றும் மனித வள பற்றாக்குறைக்கு மத்தியில் அரச கணக்காய்வு திணைக்களம் மேற்கொள்ளும் உயரிய சேவையை கருத்தில் கொள்கையில், அதற்கு வலு சேர்க்க வேண்டிய ஏனைய துறைகள் தனது கடமையை சரிவர ஆற்றி ஊழல் மற்றும் விரயத்தை தடுப்பதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும். இது ஒரு தேசத்தின் கடமை என கருதுகிறோம்.

இவ்விடையம் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு மேலும் வலியுறுத்துகிறோம். கணக்காய்வாளர் திணைக்களத்தின் பணிகளை உயரிய தரத்தில் பேணுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment