சகல பிரச்சினைகளுக்கும் குரங்குகள்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு - ஹர்ஷண ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

சகல பிரச்சினைகளுக்கும் குரங்குகள்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு - ஹர்ஷண ராஜகருணா

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் குரங்குகள்தான் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சுமத்துவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என ஹர்ஷண ராஜகருணா எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இவ்வாறு எச்சரித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் அண்மைக்காலமாக ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியது அரசாங்கமல்ல, குரங்குகளே.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்குகளே காரணம் என அமைச்சர் கூறிய போதிலும், குரங்குகள் அங்கு வரவில்லை என பாணந்துரை துணை மின் நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறிப்பிடுகின்றார்.

தற்போது தாம் எதிர்க்கட்சியில் இல்லை என்பதையும், தாமே ஆட்சி செய்கின்றோம் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சுமத்துவதை இப்போதாவது நிறுத்துங்கள்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை என்றால் வைத்தியசாலைகளில் மின் தடையால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய அதேவேளை பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

அரசியல் நெருக்கடிகளின்போது தமது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமைக்காக அரசியல்வாதிகள் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அந்த இழப்பீட்டு தொகையை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளார்களா? இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் பேசிக் கொண்டிருக்காமல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாலேயே இழப்பீட்டையும் செலுத்த வேண்டியேற்பட்டது. இவ்வாறு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள கட்சி எது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டமை தவறு என்றால், அதற்கான சூழலை ஏற்படுத்தியதும் தவறுதான். எனவே அதற்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment