ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் IOM யிடம் கையளித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ((International Organization for Migration) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழு தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்றது.
சந்திப்பின்போது, கிறிஸ்டின் பார்ஸோ, தான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் என ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
அதன்போது, தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருக்கின்றன. உதவிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுகிறது. இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமை இதற்கு காரணம். வேலை வாய்ப்பு இன்மையால், இளையோர் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது. முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து, இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்கிறோம். வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு IOM யிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம் என வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் IOM யிடம் கையளித்தார்.
No comments:
Post a Comment