சுலோச்சனாவுக்கு எதிராகவே வழக்கு, எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் அர்ச்சுனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

சுலோச்சனாவுக்கு எதிராகவே வழக்கு, எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் அர்ச்சுனா

சுலோச்சனாவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (22) நீதிமன்றம் சென்று திரும்பியபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுலோச்சனா என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். அவர் நான் இல்லை. இராமநாதன் லோச்சன எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விளக்கங்களுக்கு எனது சமூக ஊடக காணொளியை பார்வையிடுங்கள் என ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பேஸ்புக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அடையாளப்படுத்த முடியவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரின் பெயரை சரியாக பதிவு செய்ய பொலிஸார் தவறியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இன்றையதினம் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சென்றுள்ளார்.

விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததற்காக அர்ச்சுனாவின் வாகனம் நிறுத்தப்பட்டதால் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்ததை அடுத்து, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை அடையாளப்படுத்த முடியாமல் போனமையினால் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் சுலோச்சனாவுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தில் அர்ச்சுனா இராமநாதன் என்ற பெயரே உள்ளதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், உரிய சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment