மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் - சாணக்கியன் எம். பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 14, 2025

மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் - சாணக்கியன் எம். பி

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சாணக்கியன் எம்.பி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, 'வடக்கு,கிழக்கில் இருந்து அசாதாரண சூழல்களில் வெளியேறிச் சென்றிருந்த தமிழ் மக்கள் தமிழகத்தில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தங்கியிருக்கின்ற அகதிகள் தாயகம் திரும்புவது அவசியமாகும்' என்று சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், அவர்களை ஒட்டு மொத்தமாக நாட்டுக்கு மீள அழைத்து வரும்போது அவர்களுக்கான அடிப்படைய வசதிகள் உள்ளிட்ட இதர விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகள் உள்ளமையால் முன்னோடித் திட்டமொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கருதுவதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு குறித்த அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்திய நிலையில், வடக்கு, அல்லது கிழக்கு மாகாணத்தின் குறித்த பகுதியொன்றில் 25 முதல் 30 குடும்பங்களை முதலில் தாயகத்துக்கு வரவழைத்து மீள்குடியேற்றி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் யோசனைக்கும் சம்மதத்தினை வெளியிட்டனர்.

இவ்வாறான நிலையில் விரைவில் முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து ஒரு தொகுதி குடும்பங்கள் அழைத்து வரப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment