இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை பாரதியாரே பாடல் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கை - இந்தியாவிடையில் 18 கிலோ மீற்றர்தான் இடைவெளி. இதில் பாலம் அமைத்தால் நாம் காரிலேயே இந்தியாவுக்கு போய் வரலாம். அதேபோன்று அங்குள்ளவர்களும் இங்கு வந்து போவார்கள்.
இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கை வருகின்றனர். இவ்வாறான நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைத்தால் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யலாம்.
எனவே இலங்கை இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.
அதேவேளை கிளங்கன் வைத்தியசாலையை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியா இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளது. அரசாங்கத்தினால் இயலாவிட்டால் இந்தியாவிடம் உதவி கோரினால் அவர்கள் தாராளமாக அபிவிருத்தி செய்து தருவார்கள். ஏனெனில் இந்த வைத்தியசாலையை நம்பியே பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.
அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் மூலம் நடைபாதை வியாபாரிகள், பஸ், ஆட்டோக்காரர்கள், இவர்களை நம்பியுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுகினறனர் . எனவே இது தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment