ரணில் நாட்டு மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கியதால்தான் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது - எஸ்.எம்.சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 14, 2025

ரணில் நாட்டு மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கியதால்தான் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது - எஸ்.எம்.சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் பச்சை அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால்தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாய்ச் சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளன.

1 இலட்சத்து 45 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தொடர்கிறது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால்தான் சில்லறை அரிசி வர்த்தகர்கள் அரிசியை கொள்வனவு செய்ய முன்வருவதில்லை. அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது.

விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இம்முறை பொங்கல் பொங்குவதற்கும் பச்சையரிசி இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால்தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் சிறுபிள்ளைத் தனமாக குறிப்பிடுகிறது.

20 கிலோ கிராம் அரிசி இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டதே தவிர பிற நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முறையான திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.

கோட்டபய ராஜபக்ஷ சேதனப்பசளைத் திட்டத்தை அமுல்படுத்தியதைப் போன்று க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment