அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வி, இதுவே உண்மை - டி.வி. சானக - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வி, இதுவே உண்மை - டி.வி. சானக

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக மேலதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்து ஒரு தரப்பினர் 654 கோடி ரூபா இலாபமடைந்துள்ளனர். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளன. இதுவே உண்மை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை -2024 தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது ஆனால் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

சந்தையில் சிவப்பு அரிசி தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. அரிசி தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிடுகிறது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மாதாந்த விலை விபரம் தொடர்பான அறிக்கையை கொண்டு அரசாங்கத்துக்கு பதிலளிக்க வேண்டும்.

இதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாவுக்கும், செப்டெம்பர் மாதம் 210 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் இந்த மாத விலை படிவத்தில் சிவப்பு அரிசியின் விற்பனை விலை குறிப்பிடப்படவில்லை, ஏனெனில் சந்தையில் சிவப்பு அரிசி இல்லை. இதுவே உண்மை.

அரசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 240, 250 ரூபா என்ற அடிப்படையில்தான் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்து ஒரு தரப்பினர் கடந்த மாதம் மாத்திரம் 467 கோடி ரூபா இலாபமடைந்துள்ளனர்.

அதேபோல் 85 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசியும் கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக மேலதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனூடாகவும் ஒரு தரப்பினர் 187 கோடி ரூபா இலாபமடைந்துள்ளனர். ஆகவே அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்து 654 கோடி ரூபா இலாபமடைந்துள்ளனர். இதுதான் உண்மை என்றார்.

No comments:

Post a Comment