வன வளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 15.01.2025 (இன்று) இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் பெருமளவான மக்களின் காணிகள் வன வளத் திணைக்களத்தால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிராம மட்ட பொது அமைப்புக்களால் குறித்த கூட்டத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை முசலிப் பிரதேச செயலகத்தால் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் வன வளத் திணைக்களத்திடமிருந்து 3510 ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1110 ஏக்கர் காணிகளும் விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளதாகவும் இதன்போது முசலிப் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பிரதேச செயலர், கிராம அலுவலர், காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல், வனஇலாகா தமது எல்லைக் கற்களை இட்டு மக்களின் காணிகளை அபகரித்து வருகின்றது.
அத்தோடு வனஜீவராசிகள், தொல்லியல் திணைக்களத்தினர், படையினர் என பல்வேறு திணைக்களங்களும் இவ்வாறு எமது மக்களின் காணிகளை அபகரிப்புச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மிக அதிகளவான மக்களின் காணிகளை வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது.
இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும், அதேபோல் நாம் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், உரிய ஏனைய தரப்புக்களுனும் பேசத் தயாராக இருக்கின்றோம்.
வன வளத் திணைக்களத்தின் அபகரிப்புச் செயற்பாடே மிக மோசமாகக் காணப்படுகின்றது. எனவே வன வளத் திணைக்களம் மக்களிடமிருந்து திருடிய காணிகளை முதலில் விடுவிக்கப்படவேண்டும் என்றார்.
இதன்போது குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கருத்தை கைதட்டி வரவேற்றனர்.
.jpg)
அந்த வகையில் முசலி பிரதேச செயலர் பிரிவில் வன இலாகாவிடமிருந்து 3510 ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1110 ஏக்கர் காணிகளும் உரிய முறையில் கள விஜயம் செய்து, அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு காணிகளை விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் பேசி இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முசலிப் பிரதேச செயலாளர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.
No comments:
Post a Comment