கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு : தவறாக திரிபுபடுத்த வேண்டாம் என்கிறார் ஹேஷா விதானகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு : தவறாக திரிபுபடுத்த வேண்டாம் என்கிறார் ஹேஷா விதானகே

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்துபட்ட கூட்டணியில் இணைந்து பயணிப்பதற்கே ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாறாக இது இவ்விரு கட்சிகளினதும் இணைவு அல்ல. மக்கள் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவு தொடர்பில் சமூகத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அதன் உண்மைத்தன்மை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த தீர்மானித்திருக்கின்றோம்.

பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் எதிர்த்தரப்பிலுள்ள சகலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது. அதற்கமையவே நாம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் கட்சிகளில் ஒன்றே ஐக்கிய தேசிய கட்சியாகும். எனவே இதனை தவறாக திரிபுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாகக் கூறினால் அது தவறாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் அமைக்கப்படும் எதிர்க்கட்சி முகாமில் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம். அதற்கமைய சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து முன்னோக்கிப் பயணிப்பதே எமது இலக்காகும்.

இது தொடர்பில் சில பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் ஜனாதிபதி இன்னும் நிறைவேற்றவில்லை.

எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லம் தொடர்பிலும் அவர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை. எனவே இவ்வாறான விடயங்களில் அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு பலமான எதிரணி முகாமை நாம் ஸ்தாபிப்போம் என்றார்.

No comments:

Post a Comment