(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 451.3 பில்லியன் ரூபா (4,513 கோடி ரூபா) நஷ்டமடைந்துள்ளதுடன், 2023 - 2024 காலப்பகுதியில் 3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமிந்த விஜேசிறி எம்.பி. தமது கேள்வியின்போது, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஈட்டிய இலாபம் அல்லது நட்டம் வருட வாரியாக எவ்வளவு என்றும் நட்டம் ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணங்கள் எவை என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக இயங்கச் செய்வதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்றும் சமிந்த கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனமானது
2014 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 16.4 பில்லியன் ரூபா
2015 - 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 12.6 பில்லியன் ரூபா
2016 - 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28.9 பில்லியன் ரூபா
2017 - 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 17.2 பில்லியன் ரூபா
2018 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 44 பில்லியன் ரூபா
2019 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 47.1 பில்லியன் ரூபா
2020 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 45.2 பில்லியன் ரூபா
2021 - 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 166.3 பில்லியன் ரூபா
2022 - 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 73.6 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளது.
அத்துடன் 2023 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது.
நிறுவனத்தின் முறைகேடான நிருவாகம், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும், விமானங்களின் நிறுத்துகை நஷ்டஈடுகளை செலுத்தியமை, மேலதிக வட்டியை செலுத்தியமை ஆகிய காரணங்களாலும் 2019, 2020 காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் பரவல் காரணமாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்த காரணங்களினாலும், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களாலும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
2023 - 2024 காலப்பகுதியில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இலாபமடைந்துள்ளது. நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கி முன்னேற்றமடைவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment