அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு தரப்பாக பயணிக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப் பிரச்சனைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது.
அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படும்போது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்க வேண்டும். இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும்.
இது தொடர்பாக எமது கட்சியின் மத்திய குழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈபி ஆர்எல்எப், புளட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடாத்தியிருந்தோம்.
அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம் எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்து உள்ளது எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர். அந்த வகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநித்துவத்தை தக்கவைக்கக் கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்குறோம்.
கடந்தமுறை உள்ளூராட்சித் தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பாண்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒரு தரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75 வருட வரலாற்று பாரம்பரியம் கொண்ட தாய் கட்சி. எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment