அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
டொனால்ட் லுவுடன் அந்நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் தூதுக்குழுவாக கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் இன்று அதிகாலை 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தது.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதே டொனால்ட் லுவின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டிசம்பர் 10ஆம் திகதி வரை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிராந்திய செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தெற்காசியாவின் முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment