சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு மீண்டும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு, மக்களுக்கு மேலும் உகந்த சேவையை வழங்கும் பயணத்தில் சபாநாயகருக்கு தனித்துவமான வகிபங்கு இருக்கிறது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் சபாநாயகரின் பங்களிப்பு தனித்துவமானது.
சகல உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வேறுபாடின்றி கேட்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காளராக சபாநாயகர் மாறுகிறார். எனவே புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்க்கட்சி சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரம் முன்னாள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர எமக்கு நடவடி்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது. அவ்வாறு நடந்து கொள்ளாது சபாநாயகர் தனது பணியை சிறப்பாக முன்னெடுக்குமாறும், மீண்டும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு மீண்டும் எமக்கு ஏற்படக்கூடாது என பிரார்த்திக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment