செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனிய மணல் அகழ்வு முயற்சி : நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனிய மணல் அகழ்வு முயற்சி : நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

முல்லைத்தீவு - செம்மலை, நாயாறு உள்ளிட்ட இடங்களில் மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் எனும் நிறுவனம் இல்மனைட் அகழ்விற்கு எடுத்த முயற்சி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பால் 13.12.2024 (இன்று) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மக்களுடைய அனுமதியின்றி, அத்துமீறி எமது இடங்களில் கனியமணல் அகழ்வு மேற்கொள்ள முடியாதெனவும், உடனடியாக இந்த அகழ்வு முயற்சிகளைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
ஏற்கனவே கொக்கிளாய் பகுதியில், அப்பகுதி மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தபோது, மக்களுக்குரிய சுமார் 44 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறி அபகரித்து அங்கு கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், அந்த இடங்கள் மீள் நிரப்பப்படாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு கடலரிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையீடு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது செம்மலை நாயாறு உள்ளிட்ட இடங்களில் கனியமணல் அகழ்வதாலும், செம்மலையில் அமைக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பணை பாதிக்கப்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதையும், மக்களின் வயல் நிலங்கள், குடியிருப்புக்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.
எனவே மக்களுக்கு பாதகமாகன இந்த கனியமணல் அகழ்வை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியில்லாமல், இப்பகுதி மக்களின் அனுமதியில்லாமல் எவ்வாறு இங்கு கனியமணல் அகழ்வதற்கு வருகைதர முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து கனியமணல் அகழ்விற்குரிய முதற்கட்ட செயற்பாடுகளுக்கு வருகைதந்த மிட்வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிறைவேட் லிமிடட் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் இளையதம்பி தணிகாசலம், நாயாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கப் பிரதிநிதிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment