ரயில் இருக்கைளை முன்பதிவு செய்வதில் கூடுதலான கோரிக்கை இருப்பதால், இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த அனுமதியை சில மோசடிக்காரர்கள் பெற்று ரயில் பயணிகளுக்கு கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால், முன்பதிவு அனுமதிப்பத்திரத்தில் அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் குறிப்பிடப்படாமலிருந்தால் குறித்த பயணத்திற்கான கட்டணத்துடன் இரண்டு மடங்கு தொகை தண்டப்பணமாக அறிவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்கள மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
முன்பதிவு பயணச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நபரின் கடவுச்சீட்டை அல்லது சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அது தொடர்பான எண்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று பொது முகாமையாளர் ரயில் பயணிகளை அறிவுறுத்தியுள்ளார்.
திணைக்கள சட்ட விதிகளுக்கு அமைவாக ரயில் பயணத்தில் ஈடுபடுவோர் தவிர்ந்த வேறு ஒருவர், குறிப்பிட்ட முன் பதிவு பயணச் சீட்டுக்களை பயன்படுத்த முடியாது என்றும் ரயில்வே திணைக்கள மேலதிக பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறான மோசடிகளை தடுக்கும் வகையில் தற்போது ரயில் பயணத்தின்போது 60 வீதமான பயணச்சீட்டுக்கள் இணையவழி மூலமான முன்பதிவு ஆசன பயணச்சீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 40 வீதம் ரயில் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே வணிகவியல் பிரதி பொது முகாமையாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்தார்.
இனிமேல், இணையவழி முறை மூலம் ஒருவருக்கு ஐந்து பயணச்சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் பயணச்சீட்டுக்களை வாங்குபவரின் அடையாள அட்டை எண் அல்லது கடவுச்சீட்டிலுள்ள எண் உள்ளதா என பயணியிடம் கேட்கப்படும். அவ்வாறு இல்லாதாபட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment