(எம்.மனோசித்ரா)
குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நீண்ட கால தீர்வினை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பாதுகாக்கும் அதேவேளை, விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பரவலாகப் பேசப்படுகின்றது.
சூழலியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இது தொடர்பில் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. உண்மையில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை எவ்வாறு பெறுவது தொடர்பிலேயே தற்போது கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது.
விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலேயே விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களால் சில பிரதேசங்களில் மக்கள் தமது குடியிருப்புக்களைக் கூட கைவிட்டுச் செல்லும் நிலைமையும் காணப்படுகிறது. இதற்கு தீர்வினை வழங்குவதற்கு விவசாயத்துறை அமைச்சினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுற்றாடல் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள் இணைந்து இந்த பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது மிகவும் சிக்கலான விடயமாகும். சூழல் சமநிலையின்மையே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாகும்.
விவசாயத்தை பாதுகாக்கும் அதேவேளை, விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் விரைவில் நீண்ட கால தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment