பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை - பிரதி அமைச்சர் பிரதீப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை - பிரதி அமைச்சர் பிரதீப்

பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புகளை அமைப்பதற்குரிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது அமைச்சின் செயலாளர் கூறினார் எனவும், மாடி வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

தேசிய மக்கள் சக்தி மீது சேறு பூசுவதற்காக இன்று பல குழுக்களும், தோல்வி அடைந்த கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன. சொல்லாததை சொன்னதாகவும், செய்யாததை செய்ததாகவும் கருத்துகளை பரப்பி வருகின்றனர். 

அவ்வாறான எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை. எனவே, வதந்திகளை பரப்பி மக்களை அச்சப்படுத்தாமல், உண்மையை எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி இன்னும் ஒரு வருடம்தான் செல்லும் என அரசியல் ரீதியில் வங்கரோத்தடைந்தவர்கள் கூறி வருகின்றனர். மக்கள் எந்த நோக்கத்துக்காக வாக்களித்தார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வரை எமது ஆட்சியை கவிழ்க்க முடியாது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் மிக விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment