மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் - வடிவேல் சுரேஷ்

மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அட்டனில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன், ஷான் பிரதீஸ் உட்பட பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'பொதுத் தேர்தலில் நான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால் எமது பதுளை மாவட்ட மக்கள் என்னை விடவில்லை. மக்கள் பிரதிநிதித்துவத்தை காக்க நான் அங்கு போட்டியிடுகின்றேன்.

எனது மகனை நுவரெலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரையும், இளம் பெண் வேட்பாளர் அனுஷா சந்திரசேகரனையும் நிச்சயம் பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள். மற்றுமொரு தொப்புள்கொடி உறவையும் அனுப்புங்கள். நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மொத்தம் மூவரை அனுப்பி வையுங்கள்.

அதுமட்டுமல்ல பதுளை மாவட்டத்தில் இருந்து ஒலி வாங்கி சின்னத்தில் மூன்று தமிழர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்க முடியாது. இங்குள்ள அனைவரும் எனது உறவுகள்தான். மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சதி நடக்கின்றது. இதனை என் உடன் பிறப்புகள் முறியடிக்க வேண்டும்.

என்னுடைய மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நாம் மாபெரும் சக்தியாக வருவோம். மலையக மக்களை எவரும் குறைவாக எடைபோடக்கூடாது.

புதிய சின்னம், புதிய தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளோம். எமது பின்னால் அணிதிரளுங்கள். ஆடுற மாட ஆடித்தான் கறக்கனும், பாடுற மாட பாடித்தான் கறக்கனும். என் மக்களின் காணியை பிடிக்க விடமாட்டேன்." என்றார்.

No comments:

Post a Comment