இலங்கை தமிழ் அரசுக் கட்சி செயலிழந்து விட்டது என்கிறார் தவராசா - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

இலங்கை தமிழ் அரசுக் கட்சி செயலிழந்து விட்டது என்கிறார் தவராசா

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ். தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. சுமந்திரன் கட்சியின் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார், சிவகரன், சிற்றம்பலம், அருந்தவபாலன், அனந்தி, விக்னேஸ்வரன் என பலரும் வெளியேறினர்.

நான் 14 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தமிழ் தேசியத்துக்கு அப்பால் செல்ல வேண்டாம் என்பதற்காக முயற்சித்தேன்.

தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தலைவரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்து போட்டியிட முடிவெடுத்தது. கூட்டமைப்பு தனி மனித செயற்பாடு அல்ல. கட்சி தனி நபரின் கம்பனியாகி விட்டது. தமிழ் தேசியத்துக்கு யாராவது பாடுபட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவர்.

மக்களுடைய தமிழ் தேசியத்தை மூலதனமாக்கிவிட்டு தமது பொருளாதாரத்தை பார்க்கின்றனர். வெளிநாட்டில் இருந்து கட்சிக்கு வந்த நிதி பற்றி கேள்வியெழுப்பிய விமலேஸ்வரி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பதவியும் பணமும் இந்த கட்சியை இந்நிலைக்கு கொண்டுவந்தது.

ஏன் விலகினீர்கள் என பலரும் கேட்கின்றனர். அழியப்போகும் கட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது. அது வரலாற்றுத் தவறு. மாவை சேனாதிராஜாவும், சிறீதரனும் செயலிழந்து விட்டனர். கட்சியில் நான் காணாதவர்கள் தற்போது வேட்பாளர்களாக உள்ளனர். தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார்.

மாற்றம் வர வேண்டும் என்பதற்காக மாற்றானுக்கு வாக்களிக்க முடியாது. அனைவரும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் எமது மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment