பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கண்டி - கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை - கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நுகேகொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment