(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை. வேட்பாளர் தீர்மானத்திற்காக மக்கள் கட்சியை பழிவாங்கக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தேசிய அமைப்பாளர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, வேட்பாளர்களை தீர்மானிக்கின்ற பொறுப்பு தலைமைத்துவத்திடம், உயர்பீடத்திடம் இருக்கின்றது. எனவே அதற்காக மக்கள் கட்சியை பழி வாங்கக்கூடாது. எமது கட்சி வாழ வேண்டும்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்பிரதிநிதி எந்தக் கட்சியினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே.
அம்பாறை மாவட்டத்திலேயே மூன்று ஆசனங்கள் என்பது எங்களது கட்சி இலக்காகும். அரசியல் கருத்து வேறுபாடு பேதங்கள் பிரதேசவாதங்கள் இல்லாமல் மரச் சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பார்களேனால் மூன்று அல்லது இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 80 விதமான வாக்குகள் இருக்கும் பிரதேசமாக அட்டாளைச்சேனை பிரதேசம் மாற்றப்பட்டிருக்கின்றது.
நான் இந்த தேர்தலிலே, உலமாக்கள் புத்திஜீவிகள் மற்றும் கட்சி போராளிகள் கேட்டுக் கொண்டதற்காகவே நான் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை மற்றும் தீகவாவி போன்ற பிரதேசங்கள் உள்ளடங்களாக சுமார் 35,857 வாக்குகள் இருக்கின்றது இதில் 20,000 வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கும்படியாக கிடைக்கின்ற விதத்திலே அட்டாளச்சேனை பிரதேசம் மாற்றப்பட்டிருக்கின்றது இது எங்களது முயற்சியினால் மாற்றப்பட்டிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment