சுயமாக சிந்தித்து வாக்களிக்கவே பிரச்சாரங்கள் முடிவுறுத்தல், முரணாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

சுயமாக சிந்தித்து வாக்களிக்கவே பிரச்சாரங்கள் முடிவுறுத்தல், முரணாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாளர் நாயகம்

(இராஜதுரை ஹஷான்)

வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இவ்விரு நாட்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. சகல வாக்களிப்பு மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டு மொத்த மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம்.

தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டன.

வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொதுத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளமிடப்பட்டது.

அத்துடன் 2024.10.26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளமிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின்போது வாக்காளிப்பதை அடையாளப்படுத்துவதை அடையாளமிடுவதில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், பொதுத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடப்படும். வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையில் உள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும் என்றார்.

No comments:

Post a Comment