இஸ்ரேல், லெபனான் மோதலில் இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 30, 2024

இஸ்ரேல், லெபனான் மோதலில் இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களில் யாருக்காவது நாட்டுக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சீ. சேனாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எமது தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் அவர்களில் யாருக்கும் இதுவரை நாட்டுக்கு திரும்ப வேண்டி தேவையும் ஏற்படவில்லை. அவ்வாறு தேவை ஏற்பட்டால், அவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அதேநேரம் லெபனானில் 7ஆயிரம் பேர் வரை இலங்கையர்கள் இருக்கிறார்கள். இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி வரை 1116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். என்றாலும் தற்போது அங்கு இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக லெபனானுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தொழில் பதிவுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நிலைமை சீராகும்வரை தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்புவதையும் நிறுத்தி இருக்கிறோம்.

அதேநேரம் இஸ்ரேலிலும் யுத்தம் இடம்பெறுகிறது. என்றாலும் அந்த நாடு வழமைபோன்று செயற்படுகிறது. அதனால் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்படடுத்தப்பட்டிருந்தன. தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வந்தது.

இதன்போது அவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம், காப்புறுதி திட்டம் என பல திட்டங்கள் செயற்படடுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வாகனம் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபட்டிருந்தன. அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்ற நடவடிக்கை தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment