(எம்.மனோசித்ரா)
அரச உத்தியோகத்தர்களுக்கு 2025 முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். ஆனால் எந்தளவிலான அதிகரிப்பு என்பதை தற்போது கூற முடியாது. தபால் மூல வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக போலியான வாக்குறுதிகளை வழங்க தாம் விரும்பவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணியாகும். எவ்வாறிருப்பினும் திறைசேரியிலுள்ள நிதியின் அடிப்படையிலேயே அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரத்துடன் தீர்மானம் எடுத்திருந்தார். ஆனால் அவ்வாறு சம்பளத்தை அதிகரிப்பதற்கான நிதி திறைசேரியிடமுள்ளதா என்பது தொடர்பில் அவர் ஆராயவில்லை.
45 வருடங்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பொறுப்புள்ள நபர் என்ற ரீதியில் அவர் எடுத்த இந்த தீர்மானம் தவறானதாகும்.
அனுபவம் தொடர்பில் பேசும் அவர், திறைசேரியில் நிதி இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் ஆராயாமல் எவ்வாறு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்புக்காக எங்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. போலி வாக்குறுதிகளையே அவர் வழங்கியிருக்கின்றார்.
உதய ஆர் செனவிரத்ன குழுவின் அறிக்கைக்கு அமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
அமைச்சரவையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும். ஆனால் அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது.
தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. அதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக நாம் போலியான வாக்குறுதிகளை வழங்கப்போவதில்லை.
2025 இல் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். ஆனால் எந்தளவு அதிகரிப்பு என்பதை தற்போது கூறுவது கடினமாகும்.
அதேவேளை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 10 000 ரூபா சம்பளத்தின் 3 மாதங்களுக்கான நிலுவை தொகையும் 2025 ஜனவரி முதல் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment