இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெலிகமவின் முன்னாள் மேயரும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அருகம்குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலின் சுற்றுலாப் பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இதற்கு தீர்வை காண வேண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு அவசரத்தீர்வை காணுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ள அவர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம் என தெரிவித்துள்ளார்.
'ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன், உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததைப்போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடியாது, நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்க வேண்டும்" என ரெஹான் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment