பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட தனது தொகுதியில் பலமுறை தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்க வேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் அரசியலமைப்பு குறித்து பிரதமர் ஹரிணி கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக் கொடுக்க முடியும் என ரணில் தெரிவித்திருந்தமையை அடுத்து பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து விடை பெறுகின்றார் இல்லை தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருக்கின்றார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை தன்னை நிராகரித்து விட்டார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை நாங்கள் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்?
அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார், தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார். எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மக்களின் கருத்துக்களை கேட்டு, அதிகாரிகளின் கருத்துக்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறோம். அவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று நாமும் நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.
மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தது அமைப்பை மாற்றுவதற்காகவே தவிர, அவர்களிடமிருந்து பாடம் கற்று அதையே செய்ய அல்ல. அப்படிச் செய்தால் நாளை எங்களை வெளியேற்றுவீர்கள்.
நாங்கள் ரணிலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அல்ல. நாங்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
தங்களிற்கு அனைத்தும் தெரியும் ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது. அவ்வாறான அரசியல் கலாச்சராத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment