ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வடக்கு, கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில், உள்ள அவரது இல்லத்தில் நேற்று (03) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பதிவு செய்த கட்சியாக இருந்தமையால் குத்து விளக்கு சின்னம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது கட்டமைப்பு ஒன்றினை நிறுவி இருந்தோம். அதனை தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சேர்ந்தே நிறுவி பொது வேட்பாளராக அரியநேந்திரனை நிறுத்தினோம்.
அதற்கு சங்கு சின்னம் எமக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சங்கு சின்னத்திற்காக நாம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக உழைத்துள்ளோம். அதன் அடிப்படையில் சங்கு சின்னத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் 2 இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கப்பெற்றன
பொது கட்டமைப்பின் ஒரு அங்கமாக தமிழ் கட்சிகள் இருந்தமையால், இந்த தேர்தல் சின்னமாக சங்கினை மாற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரினோம்
அந்த கடிதம் பொதுக்கட்டமைப்பில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பொது சபை என்பவற்றின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் கடிதம் எழுதினோம்.
அந்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டு எமக்கு சங்கு சின்னத்தை தந்துள்ளார்கள். அதில் தான் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ளோம்.
அதன் அடிப்படையில் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு, கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் போட்டியிடும்.
மேலும், இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது. அவர்கள் எமது கூட்டமைப்புடன் இணைவது தான் சரியானது. அதனை விடுத்து , தங்களில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைப்பது சரியானது அல்ல.
ஆகவே, ஐக்கியத்தை விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஒருமித்து போவதே சரியானது. தம்மில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைத்துள்ளனர். அதிலும் யாரை அழைக்கின்றார்கள் என குறிப்பிடவில்லை.
அதுமாத்திரமின்றி அவர்களுக்கு பொது சின்னமோ பொது கட்சியோ இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது கட்சியில் தமது சின்னத்தில் போட்டியிடுமாறு கோருகின்றனர். அது சரியானதல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு நாம் பல தடவைகள் கோரியும். அதனை செய்யவில்லை.
தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கியப்பட்ட விரும்பினால், அதனை எமக்கு அறிவிக்கலாம் என மேலும் தெரிவித்தார்.
யாழ் . விசேட நிருபர்
No comments:
Post a Comment