அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத் தண்டனை: அரசுக்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வரி மோசடி - News View

About Us

About Us

Breaking

Monday, October 14, 2024

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத் தண்டனை: அரசுக்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வரி மோசடி

W.M. மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 06 மாத கால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க 6 மாத  சிறைத் தண்டனை விதித்து இன்று (14) தீர்ப்பளித்தார்.

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 355 கோடி ரூபா பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தத் தவறியதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரியை செலுத்த உத்தரவிடுமாறு கோரி உள்நாட்டு இறைவரி ஆணையாளர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

2023 ஒக்டோபர் 14ஆம் திகதி உரிய வரிகளை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், உரிய தொகையை செலுத்தாத காரணத்தால் நீதவான் பிரதிவாதிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ், அந்தனி ரன்தேவ் தினேன்ந்ர ஜோன், கே.பிரசன்ன குமாரசிறி டி சில்வா ஆகிய பிரதிவாதிகளுக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் இதற்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது மன்றில் ஆஜராகாததால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் இன்று அந்த பிடியாணையின் பிரகாரம் அவர்கள் மன்றில் ஆஜராகினர்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் உரிய வரித் தொகையை இன்று செலுத்தாவிடின் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதவான் சுட்டிக்காட்டினார்.

அதற்கிணங்க விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

எவ்வாறாயினும், பிற்பகல் 2.30 மணியளவில் தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மேல் நீதிமன்றில் பிணை மனுத் தாக்கல் செய்துள்ளதாக மீண்டும் நீதவானிடம் தெரிவித்தனர்.

குறித்த பிணை விண்ணப்பத்திற்கு உட்பட்டு தமது சேவைபெறுநர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், செலுத்த வேண்டிய வரியை தவணை முறையில் செலுத்த அனுமதியளிக்குமாறும் மனுதாரர்களால் மேன்முறையீட்டின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.

No comments:

Post a Comment