உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரச புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர, விசாரணைகளின் முக்கிய தருணங்களின்போது இராணுவப் புலனாய்வாளர்கள் சிஐடியினரை தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள அவர், புலனாய்வு அமைப்புகளிற்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என பாரதூரமான கரிசனையை வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ம் திகதி 250 பேரை பலி கொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல, நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று என தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின்போது இராணுவப் புலானய்வு பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர் என தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவப் புலனாய்வு பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் இது மறைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை (2018) விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என இராணுவப் புலனாய்வு பிரிவினர் குற்றம்சாட்டினார்கள், தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவ சீருடையை அங்கு மறைத்து வைத்தனர் என சிஐடியின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25 ம் திகதி இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைது செய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான ஷஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தாக்குதலிற்கு இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் நிதி உதவி செய்தனர் என தெரிவித்திருந்தார், இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஷானி அபயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுணதீவு கொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவப் புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர இதற்கான நோக்கம் என்னவென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் தொடரும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாம் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், தனது சார்பில் நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு, குறிப்பாக பிரபல சட்டத்தரணி விரான் கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய நிர்வாகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக அபேசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment