இலங்கையில் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய் இறப்புகள் : ஆண்களும், பெண்களும் சுய பரிசோதனை செய்வது முக்கியம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 26, 2024

இலங்கையில் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய் இறப்புகள் : ஆண்களும், பெண்களும் சுய பரிசோதனை செய்வது முக்கியம்

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் மார்பகப் புற்றுநோய் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆனால் இலங்கையுடன் ஒப்பிடும்போது உலகில் முன்கூட்டியே குறித்த நேயை கண்டறிதல் அதிகமாக உள்ளது.

எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் 5,000 க்கும் அதிகமான மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களில், 5500 பேர் பெண்களாகவும் 125 பேர் ஆண்களாகவும் காணப்படுகின்றனர்.

நாட்டில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

மார்பகங்களில் கட்டிகள் தோன்றுதல், மாற்றங்கள் ஏற்படுதல், வீக்கம் ஏற்படுதல் மற்றும் சிவந்து காணப்படுதல் என்பன மார்பக புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் ஆகும்.

எனவே இத்தகைய, அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மார்பக சுய பரிசோதனை செய்வது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையம் நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும் இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் ஆரம்பகால புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை நிலையங்கள் நடைபெறுவதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 01 முதல் 31 வரை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். இந்த ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் கருப்பொருள் 'மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது' என்பதாகும்.

No comments:

Post a Comment