ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்துவதற்கும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கும் பிரதேசங்களுக்கு மேலதிகமான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக முப்படை வீரர்களையும் போதியளவில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இறுதிப் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கு நேற்று (19) கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் காணப்படும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், ஏனைய வேட்பாளர்களுக்கும் தொடர்ந்தும் பாதுகாப்பு அவசியமாகும்.
இதேவேளை, பொலிஸாருக்கு உதவுவதற்காக எந்த சந்தர்ப்பத்தில் அழைத்தாலும் கடமைக்கு திரும்புவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அமைதியை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்புத் திட்டமும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment