பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதால் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறல் ஏற்பட்டு பாடசாலை சூழலை அரசியலாக்கும் அபாயம் ஏற்படும்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மை அவசியம். பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் அந்த செயல்முறை முறையாக நடத்தப்பட வேண்டும்.
தற்போதைய தலைமுறையினர் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அதில் கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மாணவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துள்ளன.
அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வு எடுக்கப்படும். மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த விடயம் தொடர்பில் சுயாதீன அறிக்கை ஒன்று அவசியம்.
தாமதமான அனைத்து பரீட்சை பெறுபேறுகளையும் உடனடியாக வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment