சிறு பிள்ளைத்தனமான விமர்சனம் செய்யும் அனுரகுமார - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2024

சிறு பிள்ளைத்தனமான விமர்சனம் செய்யும் அனுரகுமார - இம்ரான் எம்.பி

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சஜித் தொடர்பாக அனுரகுமார செய்யும் விமர்சனம் சிறு பிள்ளைத்தனமானது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

மூதூரில் சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அண்மையில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் அனுரகுமார, சஜித் பிரேமதாச தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்களை முன்வைத்தார். திகன, மினுவான்கொடை கலவரங்களின்போது சஜித் பிரேமதாச என்ன செய்தார் என கேட்டிருந்தார். ஆனால் அப்போது ஜனாஸா எரிப்பின்போது சஜித் என்ன செய்தார் என அவர் கேட்கவில்லை. அவரால் அவ்வாறு கேட்கவும் முடியாது.

அனுர குமார அவர்களே அப்போது சஜித் என்ன செய்தார் என நான் இப்போது கூறுகிறேன். அதுபோன்று நீங்கள் அப்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கூறுங்கள். அந்த வேளையில் சஜித் நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது உங்களைப்போன்று ஒரு கட்சியின் தலைவரோ அல்ல. அவர் வீடமைப்பு அமைச்சர் மட்டுமே.

அந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட மினுவான்கொடை, குருநாகல் பிரதேச 21 பள்ளிவாயல்களின் புனர்நிர்மாணத்துக்கு சஜித் பிரேமதாச அவர்களே நிதி உதவி செய்திருந்தார். அந்த நிகழ்வுகளில் சஜித் பிரேமதாசவுடன், நானும், முஜிபுர் ரஹ்மானும் கலந்துகொண்டிருந்தோம். அதன்பின் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இது தொடர்பாக நான், முஜிபுர் ரஹ்மான், மரைக்கார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே குரல் எழுப்பியிருந்தோம்.

தெற்காசியாவின் செல்வந்த காட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ரூபா வழங்கி இருப்பாரா? ஜனாஸா எரிப்பின்போது முழு முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடியது எம்முடன் தமிழ், சிங்கள சகோதரர்கள் இணைந்து போராடினார்கள். அப்போது எங்கே சென்றார் இந்த அனுரகுமார? ஆனால் முஸ்லிம்களோடு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒன்றாக இருந்தவர் சஜித் பிரேமதாச.

யாரையும் விமர்சனம் செய்யலாம், ஆனால் அதில் சிறிதளவாவது உண்மை இருக்க வேண்டும். விமர்சனம் செய்யும் முன் உங்களையும் சுய விமர்சனம் செய்துவிட்டு விமர்சிக்க வேண்டும். ஆகவே முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து பொய்களை கூறி முஸ்லிம் இளைஞர்களை தூண்டி விடுவதை அனுர குமார நிறுத்த வேண்டும்.

விமல் வீரவம்ச மக்கள் விடுதலை முன்னணி ஊடாக அரசியலுக்கு வந்த அந்த கட்சி கொள்கையை உடைய ஒருவர். அவ்வாறான கொள்கை உடையவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதற்கு விமல் வீரவம்சவே சிறந்த உதாரணம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment