அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 30,000 ரூபா : வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்புடன் 55,000 ரூபா - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2024

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 30,000 ரூபா : வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்புடன் 55,000 ரூபா

2025 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, தற்போது அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ. 24,000 ஐ ரூ. 30,000 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய குறைந்த தரங்களுக்கு 24% அடிப்படை சம்பள அதிகரிப்பு உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரையிலான அதிகரிப்பு மேற்கொள்ளவுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.

குறித்த அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர் தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போது வகிக்கும் பதவியின் அடிப்படையில் இந்த சம்பள அதிகரிப்பு அமையும் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அது மாத்திரமன்றி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை ரூ.25,000 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உதய செனவிரத்ன இங்கு குறிப்பிட்டார்.

தற்போதைய பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்தில்கொண்டு, ஜனவரி 2025 முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ரூ. 25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.

அந்த வகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்புடன் அரச ஊழியர் ஒருவர் ரூ. 55,000 சம்பளத்தை பெறுவார் என அவர் இங்கு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment