இன்று (19) காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.
அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க http://www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இணையவழியில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின்படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இது ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும், நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும், கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு, பின்பற்றப்பட்ட பழைய கடவுச்சீட்டு விண்ணப்ப முறையே பின்பற்றப்படுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment