இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் பாராட்டு : சந்தோஷ் ஜா, ரிஷாட் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ஆராய்வு! - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2024

இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் பாராட்டு : சந்தோஷ் ஜா, ரிஷாட் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ஆராய்வு!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் (10) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தமது நன்றிகளை வெளிப்படுத்தினார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦ வீடுகள் மற்றும் மலையகத்துக்கு வழங்கிய 10,௦௦௦ வீடுகள் தொடர்பிலும் இ ங்கு பிரஸ்தாபித்த தலைவர் ரிஷாட், இதுவரை எந்தவொரு நாடும் இவ்வாறான உதவிகளை செய்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய அவர், நெருக்கடியான காலங்களின் போது இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் போன்று, இனியும் உதவ வேண்டியதன் கடப்பாட்டையும் எடுத்துரைத்தார்.

அதேபோன்று, வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டு வரும் சர்ச்சைகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், இலங்கை கடல்வளத்தை இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் வகைதொகையின்றி அள்ளிச் செல்வதன் பாதிப்புகள் குறித்தும் தமது கவலையை வெளியிட்டார். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பிலும், இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வட மாகாணத்தில் யுத்தகாலத்தில் சேதமாக்கப்பட்ட சுமார் 200 பாடசாலைகளை, யுத்தம் முடிந்த கையோடு, எமது வேண்டுகோளை ஏற்று, துரிதகதியில் புனரமைப்பதற்காக உதவி செய்தமையை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம் என்றும் தலைவர் ரிஷாட் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகர், தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இன்னோரன்ன பல உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் பல கோடி ரூபாய்களை இந்தியா செலவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் பிரதித் தலைவர் என்.எம்.சஹீட் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment