(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் ப்ரூவருடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியபோது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு கூட அவர் இணக்கம் தெரிவித்தார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வாடகை வருமான வரி குறித்து சமூகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நாட்டில் வரிக் கொள்கையின் அடிப்படையில் நிதி தரவுகள் மற்றும் தகவல்களை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ள போதிலும், இந்த சொத்து வரி அல்லது வேறு வரிகளை அதிகரிக்கும்போது தயாரிக்க வேண்டிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை இன்னும் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் ப்ரூவரின் கருத்துப்படி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய முடியும். ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியபோது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு கூட பீட்டர் ப்ரூவர் இணக்கம் தெரிவித்தார்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய முடியும் என்று கூறும்போது, அதை திருத்த முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் உடனான ஒப்பந்தம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. தாம் விரும்பும் வகையில் மக்கள் மீது வரிகளை சுமத்த முடியாது என்பதனால், வரி அறவிடுவதற்கான காரணங்களையும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கைகளையும் முன்வைக்குமாறு கோருகிறேன்.
வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதுடன், வரி வலைக்கு வெளியே இருப்பவர்களையும் வரி வலையில் உள்ளடக்குமாறும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக இருக்காது, நாட்டுக்கு ஏற்ற உடன்படிக்கையை எட்டுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்
No comments:
Post a Comment