கடந்த வருடம் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதாக நதாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் நதாஷா எதிரிசூரிய வெளியிட்ட கருத்து புருனோ திவாகர உள்ளிட்டவர்களினால் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதில் பௌத்த தர்மத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புக் கருத்தை வெளியிட்டதாக அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கடந்த வருடம் மே 27ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரிய குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்ததோடு, ஜூலை 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவரது பிணைக் கோரிக்கை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்கும் உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
அதன்பின்னர் குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்வதற்கு போதுமான சாட்சிகள் காணப்படவில்லை என சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நேற்று உத்தரவை பிறப்பித்தார்.
No comments:
Post a Comment