சைப்ரஸில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர் சிலாபம், பிங்கிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர்.
சைப்ரஸில் விற்பனை உதவியாளர் வேலை வாய்ப்புக்கு அனுப்புவதாகக்கூறி சிலாபத்திலுள்ள இப்பெண், 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாலேயே கைது செய்யப்பட்டார்.
பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைதான இப்பெண் சிலாபம் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரை நேற்று (09) பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இரண்டு பெண்களை சுற்றுலா வீசா மூலம் டுபாயில் தொழில் வாய்ப்புக்காக அனுப்ப முயற்சித்த நபர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசா மூலம் துபாய்க்கு செல்ல முயன்ற இரு பெண்கள் மீது சந்தேகம் அடைந்த பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள், பெண்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது இவர்கள் துபாயிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலைக்குச் செல்வது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்தில் ஊடாக, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு குறிப்பிட்ட முகவருக்கு சரியான அனுமதி உள்ளதா? அந்த முகவர் நிறுவனம் சம்பந்தப்பட்ட நாட்டில் குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளதா? என்பதைக் கண்டறியுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment