தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வங்கிக் கடன் தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இது தொடர்பில் இலங்கை வங்கியின் தலைவர் மற்றும் முகாமையாளருடன் தனிப்பட்ட ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன்கள், தாமதத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், வருடந்தோறும் இவ்வாறு 4000 தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
தொடர்ந்து இந்த கடன் வழங்கப்பட்டுவரும் நிலையில், ஏழாவது மாணவர் குழுவுக்கு கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எட்டாவது மாணவர் குழுவுக்கு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன கடனை வழங்குகின்றன.
மத்திய வங்கியில் எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் இலங்கை வங்கி அதனை தாமதப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், தனிப்பட்ட ரீதியிலும் அந்த வங்கியின் முகாமையாளருடன் கலந்துரையாடினேன். வங்கியின் புதிய தலைவருடனும் கலந்துரையாடியுள்ளேன்.
நாட்டிலுள்ள பிரதான அரச வங்கிகள் இவை. நானும் கூட கடந்த காலங்களில் அந்த வங்கியில் பணியாற்றியுள்ளேன். இலங்கை வங்கியின் தாமதமே மாணவர்களுக்கு கடன் கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாணவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். அந்த வகையில் அமைச்சர் என்ற வகையில் நான் இதில் தலையிடவும் தேவையில்லை. அதிகாரிகளே இதனை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது குறிப்பிட்ட வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி, மேற்படி கடனை பெற்றுக் கொள்ள மாணவர்கள் செல்லும்போது வங்கிகளில் கடுமையான நிபந்தனைகள் பிரயோகிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இதனால் பெரும்பாலான மாணவர்களுக்கு அந்த கடனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தி அந்த சட்டங்கள் அல்லது நிபந்தனைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், முதலாம் இரண்டாம் மாணவர் குழுக்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட கடனை அந்த மாணவர்கள் முறையாக திருப்பிச் செலுத்தாததும் இதற்கான காரணம் என்று குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment